அம்பாறை மாவட்ட நிருபர் : கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்ட ஆறாம்வருட நினைவு தின நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இடம்பெறவுள்ளன.எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன், அன்றைய தினத்தை கடற்கோளால் மரணித்தவர்களுக்கான ஞாபகார்த்தத் தினமாகவும் பிரடகனப்படுத்தி அவர்களுக்காகப் பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
கடற்கோள் அனர்த்தத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத் தமிழ், முஸ்லிம் கிராமங்களான மருதமுனை, துறைநீலாவணை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில், பொத்துவில் போன்ற கிராமங்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகியதுடன் பெருமளவானோர் உயிர் நீத்த சம்பவங்களும் இடம்பெற்றன.
இதன்படி அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் உயிர்நீத்தவர்களின் நினைவுத் தூபிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளும் சமய நிகழ்வுகளும் நினைவுப் பேருரைக் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.
அதேபோல் முஸ்லிம் பிரதேசங்களில் கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிர்நீத்த மக்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்தல், அன்னதானம் வழங்கல் என்பன உட்பட நினைவு தினக் கூட்டங்களும் மார்க்க உபந்நியாசங்களும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை கடற்கோளினால் உயிர்நீத்த ஷûஹதாக்களின் 6 ஆம் வருட நினைவு தின நிகழ்வுகளை கல்முனை இஸ்லாமிய நலன்புரிச் சங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்தவிருக்கின்றது.
மௌலவி அல்ஹாஜ் எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யது கலீல் மௌலானா தலைமையில் கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசலில் நாகூர் ஆண்டகை தர்ஹா முற்றவெளியில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம் அன்னதானம் வழங்கல் மார்க்க உபந்நியாசம், துஆ பிரார்த்தனை என்பன நிகழ்வில் இடம்பெறவுள்ளன.