உலகளவில் சுனாமிப் பேரலை அனர்த்தில் கடந்த 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை நடைபெற்றது. இவ் அனர்த்தத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பேரை காவுகொடுத்த பிரதேசமான நாவலடியில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்தது. இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல் நடைபெற்றது.
நாவலடி சுனாமி நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை யாக, திதியுடன் கூடிய நினைவு விசேட பிரார்த்தனை நடைபெற்றது.மட்டக்களப்பில் அதிகமான மக்கள் பலியான நாவலடியில் வருடா வருடம் பிதிர் கடமை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இவ்வருடமும் மட்டக்களப்பில் உயிரிழந்த, இலங்கையில், உலகத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும், நடைபெற்றது.
இப் பிரார்த்தனையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது இடங்களில் பிதிர் கடமைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் கலந்து கொள்வது வழக்கமாகும். இம்முறை இந்நிகழ்வில், மட்டக்களப்பின் பல இடங்களிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டு தமது உறவனர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.

நாவலடியில் மாத்திரம் 925 பேர் சுனாமியில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மட்டக்களப்பு நகரில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அந்தவகையில், திருச்செந்தூர், டச்பார், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டு.திருமலை மறைமாவட்ட துணை ஆயர் யோசப்பொன்னையா ஆண்டகை, அருட்திரு. யோசப் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நடத்தினர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவுப் பிரார்த்தனைகள், மத அனுஸ்டானங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஏனைய இடங்களிலும் இப் பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன ,
திருக்கோவில் பிரதேசத்திலும் இப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன , இதன் போது அதிகமான மக்கள் ஆலயம் சென்று இறந்தவர்களுக்கு அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகளை செய்துள்ளனர் .