அகதி முகாமுக்குள் நள்ளிரவில் வெள்ளம் ஆலையடிவேம்பில் மீண்டும் இடம்பெயர்வு தீவுக்காலையில் 200 குடும்பங்கள் படையினரால் மீட்பு
ஆலையடிவேம்பு பகுதியில் வெள்ள அகதிகள் தங்கியிருந்த முகாமினுள் செவ்வாய்க் கிழமை இரவு திடீரென வெள்ளம் புகுந்ததால் அந்த முகாமில் தங்கியிருந்த 150 அகதிகள் பல்வேறு சிரமங்களுடன் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
இங்குள்ள பலசேவைக் கட்டிடத்தில் இந்த மக்கள் கடந்த சில தினங்களாகத் தங்கியிருந்தனர்.
இதேவேளை கோளாவில்1, கோளாவில் 2, பனங்காடு, தீவுக்காலை, நாவற்காடு ஆகிய கிராமங்கள் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தீவுக்காளை கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கிருந்த 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பொலிஸாரும் படையினரும் படகுகள் மூலம் மீட்டனர்.
இதேவேளை திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம், பாலக்குடா போன்ற கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சாகாமம் குளம் திறந்து விடப்பட்டதாலேயே இக்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாவிதன்வெளி பிரதேசத்துக்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரவு துண்டிக்கப்பட்டதால் அங்குள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒருவார காலமாக ஒரு நேரச் சாப்பாடே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.