திருக்கோவில் சாகாமம் குளம் எந்தநேரத்திலும் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதாகவும் பொதுமக்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் திருக்கோவில் பிரதேச செயலர் ஒலிபெருக்கி மூலம் நேற்று புதன் கிழமை அறிவித்துள்ளார்.
இக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்ற போதிலும் பெய்யும் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் குளம் நிரம்பி வழிகிறது.
இதனையடுத்து இக்குளம் எந்த நேரத்திலும் உடைப்பெடுக்கும் அபாயமுள்ளதாக நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்குளம் உடைப்பெடுக்குமானால் திருக்கோவில் பிரதேசம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச செயலாளரின் இந்த அறிவிப்பையடுத்து மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களில் மூவர் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பேர் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.