அம்பாறையில் அடைமழை; வெள்ளப்பெருக்கு கிராமங்கள் வெள்ளத்தில்; மக்கள் இடம்பெயர்வு


குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம்

பாலமுனை, துறைநீலாவணை, நாவிதன்வெளி நிருபர்கள் : அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருவதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தும் வருகின்றனர். பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

பொத்துவில், திருக்கோவில், தம்பிலுவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

அனைத்துப் பிரதேசங்களிலும் கடந்த மாதம் ஏற்பட்டதைப்போன்று வெள்ளம் ஏற்பட்டுள்ளன. தாழ்ந்த பிரதேசங்கள் நீரினால் நிரம்பி வீதிகளில் நீர் பரவுவதுடன் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதுடன் அரச, தனியார் அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகக் காணப்பட்டன.

அநேக பாடசாலைகள் நீரில் மூழ்கியுள்ளதனாலும் மாணவர்களின் வரவு குறைவாகக் காணப்பட்டதாலும் பல பாடசாலைகள் நேரகாலத்தோடு மூடப்பட்டன.

உள்ளக வீதிகளில் நீர்தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதோடு, நீரை வழிந்தோடச் செய்யும் வகையில் வீதிகளையும் வடிகான்களையும் வெட்டி விடுவதில் மக்கள் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. சகல பிரதேச செயலகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பிரதேச செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

குளங்கள் பலவும் நிரம்பி வழிவதால் அவை திறக்கப்படவுள்ளன. இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று புதன்கிழமை அம்பாறை மாவட்டத்தில் 43.4 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நெற்காணிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அறுவடை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களது தொழிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.


Tags: , , ,

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.